என்னிடம் கேட்டபோது, போராட்டத்தில் இருந்ததாக சொன்னேன்''என்கிறான் புன்னகையுடன்

முசம்மிலிடம் பேசியபோது தனது அம்மா போராட்டத்தில் இருக்கிறார் என்பதை உணர்ந்துள்ளதாக சொல்கிறான். ''கடந்த வெள்ளிக்கிழமை இங்கு வந்தோம். போலீஸ் தடியடி நடந்தது. அம்மா இங்கேதான் நாம் இருக்கவேண்டும் என சொன்னார். எனக்கு முதலில் பயம் இருந்தது. இப்போது என் நண்பர்கள் எல்லோரும் இங்கேதான் இருக்கிறோம். நான்கு நாட்கள் பள்ளிக்கு செல்லாததால், மற்ற நண்பர்கள் என்னிடம் கேட்டபோது, போராட்டத்தில் இருந்ததாக சொன்னேன்''என்கிறான் புன்னகையுடன்.


போராட்டத்தை பற்றி கேட்டபோது, போராட்டக்களத்தில் ஒலிக்கும் கோஷங்களை பற்றி கூறிய சிறுவன், ''குடியுரிமை திருத்த சட்டத்தை ரத்து செய்தால்தான் அம்மா வீட்டுக்கு வருவார். அன்றுதான் போராட்டம் முடியும்,'' என்றான்.


ஷெனாஸ், அமீர் தம்பதி முழுநேரமாக இருவருமே போராட்டத்தில் இருக்கிறார்கள். மூன்று குழந்தைகளும் போராட்டம் நடைபெறும் இடத்தில்தான் பெற்றோரை சந்திக்கிறார்கள். ''காலை பள்ளிக்கு போகும் முன்பாகவும், இரவில் தூங்குவதற்கு முன்பாகவும் சிறிது நேரம் பாடங்களை சொல்லிக்கொடுக்கிறோம். என் மகனுக்கு மூன்று பரீட்சைகள் உள்ளன. வண்ணாரப்பேட்டை போராட்டத்தில் நாங்கள் இருவருமே தன்னார்வலர்களாக இருப்பதால், குழந்தைகளுக்கான நேரத்தை முழுமையாக ஒதுக்கமுடியவில்லை. ஆனால் இந்த போராட்டம் சமூகத்திற்கான போராட்டம் என்பதால், நாங்கள் எங்கள் வசதிக்காக பின்வாங்கவிரும்பவில்லை,''என்கிறார் அமீர்.


போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள், தங்களது குடும்ப உறுப்பினர்கள் எல்லோரும் ஒரே இடத்தில் இருப்பதால், குழந்தைகளை மட்டும் வீட்டில் தங்கவைப்பதை விரும்பவில்லை என்பதால் தங்களுடன் தங்கவைப்பதாக தெரிவித்தார் அமீர்.


போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து எதிர்க்கட்சி தலைவர்கள் பலரும் வந்து போராட்டக்கார்களிடம் பேசுகிறார்கள்.