டெல்லி: நிர்பயா வழக்கில் தூக்குக்தணடனை விதிக்கப்பட்டுள்ள குற்றவாளி வினய் ஷர்மா உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனுத்தாக்கல் செய்துள்ளார்.
தலைநகர் டெல்லியில் கடந்த 2012ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ஓடும் பேருந்தில் மருத்துவ மாணவி நிர்பயா கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டார். படுகாயங்களுடன் சிங்கப்பூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிர்பாயா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த சம்பவம் தொடர்பாக அக்ஷய் குமார் சிங், பவன் குப்தா, வினய் ஷர்மா, முகேஷ் சிங், ராம் சிங் மற்றும் ஒரு சிறுவன் என 6 பேர் கைது செய்யப்பட்டனர். குற்றம் நிரூபிக்கப்பட்ட சிறுவன் மட்டும் சிறார் சீர்திருத்த பள்ளியில் அடைக்கப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டார். அதேசமயம், எஞ்சிய ஐந்து பேருக்கு டெல்லி உயர் நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்தது.
முக்கிய குற்றவாளியான ராம்சிங் டெல்லி திகார் சிறையிலேயே தற்கொலை செய்து கொண்டார். மீதமுள்ள நால்வரும், தங்களுக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை ரத்து செய்ய கோரி உச்ச நீதிமன்றத்தில் முறையிட்டனர். அதனை விசாரித்த உச்ச நீதிமன்றம் அவர்களது கோரிக்கையை நிராகரித்ததுடன், தூக்கு தண்டனையை உறுதி செய்தும் உத்தரவிட்டது.
இதையடுத்து, குற்றவாளிகள் பவன் குப்தா, வினய் ஷர்மா, முகேஷ் சிங் ஆகியோர் 2017ஆம் ஆண்டில் உச்ச நீதிமன்றம் பிறப்பித்த தூக்குத் தண்டனை உத்தரவை எதிர்த்து கடந்த ஆண்டு சீராய்வு மனுத்தாகல் செய்தனர். ஆனால், அதனை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.